வீரத்தமிழர் முன்னணி

                                                                                                 தமிழும் இசையும்

 இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். அதனால் தான் இறைவனைப் பன்னிசையால் பாடிப் பரவினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பத்திப்பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முதலியவை குறிப்பிடத் தக்கன.இந்நூல்களில் உள்ள பத்திப் பாடல்கள் தமிழ்த்தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவைதருவனவாகும்.

        பண்பட்ட எல்லா மொழிகளிலும் இசை வாழ்கிறது. ஆனால், எந்த மொழியிலும் இதை முக்கியக் கூறாகச் சொல்வதில்லை; சிறப்பித்தும் போற்றுவதில்லை. ஆனால், தமிழில் மட்டுந்தான் இசைத்தமிழ் என்ற பிரிவே விளங்குகின்றது. சுதி,பாட்டு,பண்,தாளம், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகியவை இசைந்தால்தான் அதை இசையென்று தமிழர்கள் கூறுவர். அப்படி இல்லையென்றால் அதன் பெயர் இரைச்சல் என்றாகிவிடும். இசைக்குப் புகழ் என்ற பெயரும் உண்டு என்பதைத் திருவள்ளுவம் இயம்புகின்றது.

                                                        ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
                                                        ஊதியம் இல்லை உயிர்க்கு

எனும் திருக்குறள் இதனை மெய்ப்பிக்கும்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பண்டைய தமிழர்கள் இசையை எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல்,செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டு, திருமணத்தில் நலுங்குப்பாட்டு, கருப்பக் காலத்தில் வலைக்காப்புப்பாட்டு, இறப்பின் போது ஒப்பாரிப்பாட்டு, என்று தமிழரின் வாழ்வில் இறப்பு முதல் பிறப்பு வரை இசை இடம் பெற்றுள்ளதும் இசையோடு தமிழர்கள்கள் வாழ்ந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.

இசை,இனிய கலை என்பதால் அது பயிரையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டது;மேலும் இசை மருந்தாகவும் பயன்படுகிறது.மனிதர்கள் மட்டுமின்றி அஃறிணை உயிர்களுக்கும் இசை பல வழிகளில் துணைபுரிகிறது. மேலைநாட்டுத் தத்துவ மேதையான சேக்ஸ்பியர்இசைக்குக் கட்டுபடாதவன் எத்தகைய கொடுஞ்செயலையும் செய்யக் கூடியவன் என்று கூறுகின்றார். இதனால்தான், இசையால் வசமாகாத இதயம் இவ்வையகத்தில் இல்லை என்று தமிழிசைச் சான்றோர்கள் இயம்புகின்றனர்.

                                                                                                         வீரக்கலை

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.

போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.

இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் கரந்தை என்றும் அப்பசுக்களை மீட்டல் வெட்சி என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை வஞ்சி என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் உழிஞை எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் தும்பை என்பர். இதில் வெற்றி பெறுதல் வாகை எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.

போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது. அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.

போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயினதமிழனின் வீரக்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை.

                                                                                                இசைக்கலை

பண்டையத் தமிழர் தம் மொழியை இயல், இசை,நாடகம் என மூவகைப்படுத்தி வளர்த்தனர். எனவே, தமிழ், முத்தமிழ் ஆயிற்று. முத்தமிழுள் இசைத்தமிழ் ஒன்று. இசைத்தமிழ் ஒரு கலையாய்நுண்கலையாய் இசைக்கலையாய் வளர்ந்தது.

இசைக் கலை ஒலியின் அடிப்படையில் அமையும் கலை; செவி வழி துய்க்கும் கலை. குழல் இசை, பாடல் இசை போன்றவை இனியவை என்றும், பூனை கத்தல், காக்கை கரைதல் போன்றவை சாதாரணமானவை என்றும், புலியின் உறுமல், இடியின் ஓசை போன்றவை கடுமையானவை எனவும் ஒலியை மூவகைப்படுத்துவர். இனிய ஒலிகள் தனித்து இனிப்பவை;இணைந்து இனிப்பவை என இருவகைப்படும். தனித்து ஒருவர் பாடுதல், குழல் மட்டும் இசைத்தல் போன்றவை தனித்து இனிப்பவை. குரல், குழல், யாழ், முழவு, தாளம் ஆகியவை கூட்டாய்ச் சேர்ந்து இசைத்தல் இணைந்து இனிப்பானவை.

இனிய ஒலி செவி வழி புகுந்து, இதய நாடிகளைத் தழுவி உயிரினங்களை இசையவும் பொருந்தவும் வைக்கின்ற பொழுது, அது இசை எனும் பெயரைப் பெறுகின்றது. இசை எனும் சொல் இயைவிப்பதுபொருந்தச் செய்வது, தன்வயப்படுத்துவது எனப் பொருள்படும். இசை கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசை வயப்பட்டு நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. பயிர் வளர்ந்து நிறைந்த பயன் விளையவும், பசு மிகுந்த பால் சுரக்கவும் தூண்டும் அது. இசை உயிரினங்கள் அனைத்தையும் தன்பால் ஈர்த்து உய்விக்கும் தன்மையைப் பெற்றது.

பண்டைய தமிழர் வளர்த்த நுண்கலைகளுள் இசைக்கலை முதன்மையானது; தலை சிறந்தது. முற்காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன. பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்றவை குறிப்பிடத்தக்கவனவையாகும். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் பல்வகைப் பண்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் தொடர்பான செய்திகளைச் சொல்கின்றது.

                                                                                                       ஆடல் கலை

அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப்பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் (கி.பி 2-ஆம் நூற்றாண்டு) நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார். அவருடைய காலத்திலிருந்து ஆடல், தாண்டவம் (ஆண்களுக்குரியகூத்து) இலாசியம்(பெண்களுக்குரியகூத்து) நிருத்தம்(சுத்த நடனம்) என வகுக்கப்பட்டது. பின்னர் நிருத்தமும் அபிநயமும் கலந்த நிருத்தியம் எனும் வகையும் தோன்றியது.

சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி ஆடிய ஆடல் இலாசியம் என்றும் சொல்லப்பெறுகிறது. பிற்கால ஆடல் இலக்கண நூல்களில் எண்ணற்ற ஆடல் வகைகள் குறிக்கப்பெறுகின்றன. பாரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார்.

தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஆடல் வகைகளை விவரிக்கும் ஐந்து நூல்கள், சிகண்டியின் இசை நுணுக்கம் சியாமளேந்திர்ரின் இந்திரகாளியம் அறிவனாரின் பஞ்ச மரபு ஆதிவாயிலாரின் பரத சேனாபதீயம் மதிவாணரின் நாடகத் தமிழ் நூல் என சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். தென்னாட்டில் வழங்கி வந்த இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதன் உரைகளையும் கலித்தொகை முதலாய சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்தால், அக்காலத்தில் ஆடல் கலை, கூத்து, குனிப்பு, என்றும் வழங்கி வந்தமையையும், அகக்கூத்து புறக்கூத்து என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தமையையும் அறியலாம். இவற்றைத் தவிர்த்து, கடவுலர் ஆடிய அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பேடி, கடையம், பாண்டரங்கம், மல், துடி, மரக்கால், பாவை எனப் பதினொரு வகைக் கூத்துகளையும், மக்கள் வழக்கிலிருந்த குரவை, கலிநடம், நோக்கு ஆகிய கூத்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய நடனவகைகளுள் மிகத் தொன்மை வாய்ந்ததும் உலகப் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன்னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். தமிழ் நாட்டில் உருவான மற்றொரு வகை நாட்டியம் குறவஞ்சி ஆகும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வடிவம் குறவஞ்சியில் அழகுடன் அமைந்துள்ளது. தமிழ் நாட்டுக்கே உரிய குறி சொல்லும் குறவன் , குறத்தி ( சிங்கன், சிங்கி) முதலிய பாத்திரங்கள் தோன்றும் இந்நாடகம் நகைச்சுவைக் கலையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆடல் கலை நம் முன்னோரின் ஊனோடும் உணர்வோடும் கலந்த கலையாகும்.

நன்றி: உமா பதிப்பகம்

                                                                                                          கூத்துக்கலை

தமிழ் முத்தமிழ் என வழங்கப்பெறும். இயல்,இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள்.வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது இயல் என்றும், ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது இசை என்றும் மெய்ப்பாடுகளினால் வெளிப்படுத்தப் பெறுவது கூத்து என்றும் வழங்கப்பெறும்.ஆடற்கலையும் நடிப்புக் கலையும் ஒருங்கே வளர்ந்தவை.பாவ, ராக, தாள வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்கும். கூத்து என்பதை இளங்கோ அடிகளார்தாம் நாடகம் என முதன் முதலில் குறிப்பிட்டவர் என்பர்.
சங்க கால மக்கள் வாழ்வில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர்.இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். சங்க காலத்தில், வழிபாட்டு நிலையில் மட்டுமன்றிப் பொழுதுபோக்கு நிலையிலும், தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப் பெற்றன.குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து,வெறியாட்டு, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல்வகைக் கூத்துகள் நடத்தப்பெற்றன என்பதை சங்க நூல்களில் பரவலாகக் காணலாம். கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைப்பெற்றன என்பதைக் குறிக்கும்.இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சிலவிடங்களில் பொழுது போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப்பெற்றது. இன்று, நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கூத்து கருதப்பெறுகின்றது.

இந்தக் கவினுறு கலை அருகி வரினும் அதன் சிறப்பு இன்னும் குறையவில்லை எனலாம்.இக்காலத்தில் காணப்பெறும் கூத்து வகைகளுள் பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து ஆகியன கதை சார்ந்தவை என்றும் புரவியாட்டம், சாமியாட்டம், கழியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை கதை சாராதவை என்றும் பாகுபடுத்துவர்.போருக்குப் புறப்படும்பொழுது வெறிக்குரவையும், போரில் வெற்றிக்காகக் துணங்கைக் கூத்தும் ஆடுவர் எனச் சங்க இலக்கியம் கூறும்.

கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும், பின்னர் கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும், இசைத் தமிழ்ப்பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத்தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல், இசை, ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து, கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது.கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் கூத்தர் பெருகினர்; கூத்து வகைகளும் பெருகின. போட்டிகள் உருவாகின. அதன் விளைவுதான் இன்றைய நாடகங்களும் திரைப்படங்களும் ஆகும். சுருங்கக் கூறின், தமிழர் வாழ்வில் கூத்துக் கலை இரண்டறக் கலந்துவிட்டதென்றே கொள்ளலாம்.

Copyright © 2023 வீரதமிழர் திருமன்றம்- அமெரிக்கா​

You cannot copy content of this page